Thursday, May 10, 2018

மாயக்கண்ணாடி.. வாலிபர்களுக்கான கதை


இயேசு குருடனை சுகப்படுத்தினார்

இயேசு குருடனை சுகப்படுத்தினார்

இயேசு குருடனை சுகப்படுத்தினார் என்ற உண்மை சம்பவத்தை அழகான படக்காவியமாக பதிந்துள்ளார். படித்து பகிர்ந்து கொள்ளவும் 

இயேசுவின் சகேயுவும்

இயேசு கிறிஸ்துவிம் சகேயுவும் சந்தித்த கதை குழந்தைகளுக்காக படவிளக்கத்தோடு பதிந்துள்ளார்கள். படித்து பயன்பெறுங்கள்.

https://bibleforchildren.org/PDFs/tamil/Jesus_and_Zaccheus_Tamil.pdf

Wednesday, November 1, 2017

இயேசு கிறிஸ்துவின் லாசருவும்

இயேசு கிறிஸ்துவின் லாசருவும்

இயேசு கிறிஸ்து லாசருவை உயிரோடு கொண்டுவந்த சம்பவத்தை படங்களோடு படைத்துள்ளார். படித்து பகிர்ந்து கொள்ளுங்கள்

https://bibleforchildren.org/PDFs/tamil/Jesus_and_Lazarus_Tamil.pdf

Wednesday, December 31, 2014

2015ம் வருட வாழ்க்கை கணக்கு

இந்த உலகில் வாழ்கிற விசுவாசிகளானாலும் சரி, அவிசுவாசிகளானாலும் சரி, நாம் ஒவ்வொருவர் செய்யும் ஒவ்வொரு கிரியையும் தேவனால் கவனிக்கப்பட்டு வருகிறது. அந்த எல்லா கிரியைக்கும் தக்க பலன் உண்டு. அந்த நாள் நியாயத்தீர்ப்பின் நாள் ஆகும். அந்த நாளில் சர்வத்திற்கும் நியாயாதிபதியாம் இயேசுகிறிஸ்து நியாயாசனத்தில் அமர்ந்து, நம் ஒவ்வொருவரிடமும் 'உன் உக்கிராணக் கணக்கை ஒப்புவி' என்று கட்டளையிட்டாரானால் நாம் என்ன பதில் சொல்லுவோம்? கீழ்க்ண்டவாறு நம்மை கேட்பாரானால் நாம் என்ன பதில் சொல்வோம்?
.
நான் உன் கையில் ஒப்புவித்த உலகப் பொருட்களை நீ எவ்வாறு உபயோகித்தாய்? நீ உன் வீட்டையும், நான் உனக்கு தந்த அநேக சௌகரியங்களையும் என்னுடைய மகிமைக்காக மாத்திரம் உபயோகித்தாயா? அல்லது அவைகளை உன்னுடைய புகழ்ச்சிக்காகவும், உன்னையே பிரியப்படுத்திக் கொள்வதற்காகவும் பயன்படுத்திக் கொண்டாயா?
.
நான் உனக்கு தந்த உடைகளை நீ எவ்வாறு உபயோகித்தாய்? அவைகளை பெருமைக்கும் மாயைக்கும், பிறரை பாவத்திற்கு ஏதுவாய் தூண்டுகிற விதமாக கவர்ச்சியாகவும் உடுத்தினாயா? அல்லது, தகுதியான வஸ்திரத்தினால் உன்னை ஒழுக்கமாய் மூடுவதற்கும், சீதோஷண நிலையிலிருந்து உன்னைக் காத்துக் கொள்வதற்காகவும் உடைகளை உடுத்தினாயா?
.
உன் பணத்தை நீ எவ்வாறு உபயோகித்தாய்? உன் மாம்சத்தின் இச்சைகளையும் உன் கண்களின் இச்சைகளையும் உலகத்தின் ஜீவனத்தின் பெருமைகளையும் பூர்த்தி செய்வதற்கென உபயோகித்தாயா? வீணாக செலவு செய்து உன் பணத்தை சிதறடித்தாயோ? அப்படி இல்லாமல் பணத்தை உனக்கும், உன் குடும்பத்திற்கும் தேவையானதை உபயோகித்துவிட்டு, மீதியாய் இருப்பவைகளை வாங்கிக் கொள்ளும்படி நான் நியமித்த ஏழைகளின் மூலம் எனக்கு திருப்பித் தந்தாயா?
.
நான் உனக்கு ஒப்புவித்த சரீரத்தை எப்படி உபயோகித்தாய்? நீ எனக்கு துதி செலுத்தும்படியே நாவை உனக்கு தந்தேன், அதை தீமை பேசுவதற்கும் பிரயோஜனமற்ற வீண் சம்பாஷணைகளுககும், பயன்படுத்தினாயா? அல்லது கேட்பவர்களின் செவியை கிருபை பொருந்திய வார்த்தைகளால் நிரப்பினாயா? மேலும் நான் உனக்கு நியமித்த கிரியைகளை நீ செய்து முடிக்கும்படி உனக்கு கரங்களையும் கால்களையும் இன்னும் பல உறுப்புகளையும் வழங்கியிருந்தேன். நீ அவைகளை பயன்படுத்தி உன்னை பூமிககு அனுப்பினவரின் சித்தத்தை செய்து முடித்தாயா? அல்லது உன் மாம்சத்தின் விருப்பத்தையும் உன் உணர்ச்சியும் நடத்திய பாதைகளுக்கு எல்லாம் உன் அவயவங்களை உன் இஷ்டத்திற்கு ஒப்புக் கொடுத்து விட்டாயா?
.
நான் உனக்கு கொடுத்த நேரத்தை எப்படி உபயோகித்தாய்? உன் மீதியான நேரங்களில் உன் தேவனோடு உறவாட வேண்டிய நேரங்களில் உறவாடினாயா? ஊழியம் செய்ய வேண்டிய நேரங்களில் உல்லாசமாக, அல்லது உலக காரியங்களுக்காக செலவழித்தாயா?
.
நியாயாதிபதியாம் இயேசுகிறிஸ்து நம்மைப் பார்த்து இந்தக் கேள்விகளை கேட்டால் நாம் என்ன பதில் சொல்வோம்? ஆம் ஆண்டவரே, நீர் என்னை உலகத்தில் படைத்த நோக்கத்தை நிறைவேற்றி முடித்தேன் என்று புன்னகையோடு சொல்ல முடியுமா? அல்லது தலைகுனிந்து நிற்போமா?
.
ஒருவேளை நாம் குறைவாக காணப்பட்டால், இந்த நாளிலிருந்துதானே அதை சரியாக்க முற்படுவோம். நம் நடை உடை பாவனை சொல் செயல் எல்லாம் அவரையே பிரதிபலிக்கட்டும். கர்த்தர் கிருபையாக நமக்கு கொடுத்த எல்லாவற்றிலும் அவரையே மகிமைப்படுத்துவோம். 'ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையம்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்' என்ற வார்த்தையின்படி நாம் நிச்சயமாக அவர்முன் நிற்க வேண்டும். அதற்காக நம்மை தயார்ப்படுத்துவோம்.

Tuesday, December 30, 2014

இயேசுவின் வருகை - ஆயத்தமா?

இரண்டு பேர் மாரத்தான் என்னும் ஓட்டப்பந்தயத்தில் பங்கெடுப்பதற்காக பெயரை கொடுத்திருந்தனர். ஒருவர் தினந்தோறும் மைல் கணக்கில் ஓடி பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். உடற்பயிற்சியும் மேற்கொண்டார்.
.
மற்றவர் சாதரணமாக தூங்குவதைவிட இன்னும் இரண்டு மணி நேரம் சேர்த்து தூங்க ஆரம்பித்தார். ஒரு உடற்பயிற்சியோ, ஓட்டம் ஓடியோ பழகவோ இல்லை.
.
மாரத்தான் ஓடும் நாள் வந்தது. 26.2 மைல் தூரம் ஓட வேண்டும். யார் ஜெயித்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? நிச்சயமாக பயிற்சி எடுத்தவர்தான். அடுத்தவர் ஒரு மைல் தூரம் ஓடுவதற்குள் களைப்பாகி நிறுத்தியிருப்பார்.
.
இரண்டு கிறிஸ்தவர்கள் வரப்போகிற கொடுமையான நாட்களுக்கு தப்பித்துக் கொள்ளும்படி போதிக்கப்பட்டிருந்தனர். அதை உண்மையாக எடுத்துக் கொண்டு, ஒருவர் ஜெபித்து கர்த்தரோடு தான் கொண்டிருந்த உறவில், ஐக்கியத்தில் நிலைத்திருந்து, தினமும் வேதம் வாசித்து, தன்னால் இயன்ற வேத வார்த்தைகளை மனனம் செய்து கர்த்தருக்குள் தன்னுடைய ஆவியில் ஒருமனப்பட்டிருந்தார்.
.
மற்றவர் ஆலயத்திற்கு செல்லும்போதுதான் வேதத்தை பிரிப்பார். ஆலயத்தில் ஜெபிக்கும்போதுதான் ஜெபிப்பார். ஞாயிற்றுக் கிழமை வந்தால்தான் அவருக்கு கர்த்தரைப்பற்றியும், ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்கிற ஞாபகமும் வரும்.
.
ஒரு நாள் அவர்கள் வாழும் பகுதியில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படும் நாட்கள் வந்தது. கர்த்தரோடு இணைந்திருந்தவர் கர்த்தர் தன்னை எந்த நேரத்திலும் கைவிடமாட்டார் என்று விசுவாசத்தோடு காத்திருந்து, வெற்றியும் பெற்றார். மற்றவரோ கர்த்தரையும், சபையையும், தன் நண்பர்களையும், குடும்பத்தினரையும் இந்த நிலைக்கு அவர்களே காரணம் என்று சாட ஆரம்பித்தார்.
.
பிரியமானவர்களே, நாமும் ஒரு மிகப்பெரிய சம்பவம் நிகழ்வுற காத்திருக்கிறோம். அதுதான் கர்த்தருடைய இரகசிய வருகை. நாம் எந்த அளவு கர்த்தரோடு ஐக்கியம் கொண்டுள்ளோம் என்பதைப் பொறுத்தே நாம் எடுத்துக் கொள்ளப்படுதலும் இருக்கும். நாம் கர்த்தரோடு கொண்டுள்ள ஐக்கியத்தில் நிலைத்திருப்போமானால் அவர் வந்தவுடன் நம்மை அடையாளம் கண்டு கொள்வார். நாமும் அவரோடு செல்லுவோம்

Friday, December 26, 2014

மலையாள நகைச்சுவை நடிகர் பிரேம்குமார்

மலையாள நகைச்சுவை நடிகர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுகொண்ட பாதையின் சுவடுகள்.

பிரேம்குமார் அவர்கள் 1990 களில் இருந்து மலையாள பட நகைச்சுவை உலகில் கோடி கட்டி பறந்தவர். பிரபல திரைப்பட நடிகர்கள் திரையில் இவர் இல்லாமல் இருந்தது இல்லை என்ற நிலைக்கு கொண்டு வந்தவர். சுமார் 100 படங்களுக்கு மேலாக நடித்துள்ள இவர் 16 படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவரின் மனைவி பெயர் ஜிஷா. இவர்களுக்கு ஜெமீமா என்ற ஓர் பெண் குழந்தை உண்டு. சினிமா படவுலகில் கொடிகட்டி பரந்த இவர் தற்பொழுது இயேசு கிறிஸ்துவை முழு மனதோடு ஏற்று கொண்டு குடும்பத்தோடு தேவனுக்கு ஊழியம் செய்து வருகிறார்.

ஓர் சொப்பனத்தின் மூலமாக நான் இயேசு கிறிஸ்துவை தெரிந்து கொண்டேன். என் வாழ்க்கையில் குறிக்கோள் ஒன்றும் கிடையாது. சிறு வயதில் இருந்தே எனக்கு எந்த ஓர் காரியத்தையும் தெளிவாக செய்ய தெரியாது. பள்ளி பருவத்திலேயும், கல்லூரி வாழ்க்கை காலத்திலேயும் கடைசியில் தான் இருப்பேன். ஆனால் தேவன் என்னை ஓர் நாள் அழைத்தார். கோடிக்கணக்கான மக்கள் மத்தியில் தேவன் என்னை பெயர் சொல்லி அழைத்தார். நான் தேவனை தேடி போகவில்லை. ஆனால் தேவன் என்னில் வைத்த அன்பு காரணமாக என்னை அழைத்தார். வேத வசனத்தில் கூறி உள்ளது போல "தாய் உன்னை மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை" அதை நான் இன்னமும் அனுபவித்துகொண்டிருகிறேன். எனக்கு பிடித்த வேதாகம கதாப்பாத்திரம் பவுல் அடிகளார். பவுல் சொன்னது போல "நல்ல போராட்டத்தை போராடினேன்" என்று கடைசி மூச்சு வரை கர்த்தருக்காக எதாவது செய்தது போல நானும் கர்த்தருக்காக எதாவது கடைசி மூச்சி உள்ளவரை செய்ய வேண்டும் என்று ஆசை உள்ளது. என்னையும் தேவன் பயன்படுத்துவார் என்ற விசுவாசம் இருக்கிறது.

தேவன் என்னை அவருக்காக பயன்படும் பாத்திரமாக வனைந்து கொண்டிருக்கிறார்.

ஆமென்.. கர்த்தருக்கிரே மகிமை உண்டாவதாக.. ஆமென்.

தேவனுக்கென்று குடும்பமாய் வைராக்கியமாய் வாழும் இவர்களை வெள்ளித்திரை என்னும் பாம்பு மீண்டும் மயக்கி விடாதபடி திறப்பின் வாயில் நின்று ஜெபிப்போம்.
 

Visit: www.facebook.com/TamilNaduChristianMinistries

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்


http://malankaranazrani.com/?p=6651
http://www.youtube.com/watch?v=JL8qDbFRHuo

Thursday, December 25, 2014

கிறிஸ்மஸ் - ஓர் முக்கியமான காரணம்

இயேசு கிறிஸ்து இந்த பூமியில் பிறக்க ஓர் முக்கியமான காரணம் உண்டு.

பாவத்தில் உழன்று தவிக்கும் ஒவ்வொருவருக்கும் கடவுள் கொடுக்கவிருக்கும் மிகப்பெரிய சமாதானமான வாழ்க்கையே அது. பாவத்தினால் வரும் விளைவினால் இன்று மனிதனுக்கும் கடவுளுக்கும் மிகபெரிய விரிசல் விழுந்தது.

மனிதர்கள் எல்லோரும் பரலோகம் செல்வோம் என்று கூவுவதால் எந்த பயனும் விளையப்போவது இல்லை. பரலோகம் நாம் நினைப்பது போல சாதாரணமான இடம் அல்ல. அது கடவுள் தங்கும் மிகப்பெரிய உன்னதமான இடம். கடவுள் பரிசுத்தர் என்றால், பாவம் இல்லாதவர் என்றால், அவருடன் இருப்பவர்களும் அவ்வண்ணமே இருக்க முடியும். நமது வீட்டை சுத்தமாய் வைக்க ஆசைப்படுவோம். நடுவீட்டில் அசிங்கத்தை போட்டு அதனை பொறுத்து கொண்டு வாழமாட்டோம்.
அதை போலத்தான் நமது தெய்வமும். அவருடைய வீட்டில் அனேக வாசஸ்தலங்கள் உண்டு. ஆனால் அது பாவிகளுக்கு அல்ல. பாவ மன்னிப்பை பெற்று கொண்டவர்களுக்கு மட்டுமே.

அப்படிப்பட்ட இடத்திற்கு உன்னையும் என்னையும் அழைத்து செல்ல வந்த ஓர் மிகப்பெரிய தெய்வம் தான் இயேசு கிறிஸ்து. பாவ மன்னிப்பை வளங்கள் நியாயத்தீர்ப்பு கொடுக்கவிருக்கும் நீதிபதிக்கே அதிகாரம் உண்டு. அந்த பாவ மன்னிப்பின் அதிகாரத்தை பெற்ற இயேசு கிறிஸ்து சிலுவை மரணத்தின் மூலமாக வழங்கினார். இதை ஏற்று கொள்ள மறவாதீர்கள். உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாட உண்மையில் தகுதி உடையவர்கள் தானா என்று அறியுங்கள். இந்த இயேசு பிறந்த நாளில் ஒருவருக்காவது பாவ மன்னிப்பை குறித்தும் பரலோக கிரீடத்தை குறித்தும் பகிர மறவாதீர்கள்.

கிறிஸ்மஸ் பிறப்பு அல்ல, நம் உள்ளத்தில் இயேசு என்று பிறக்கிறாரோ அன்று தான் உண்மையான கிறிஸ்மஸ் நன்னாள். இந்த இயேசு கிறிஸ்து நம் உள்ளத்தில் பிறக்கவில்லை என்றால் "நானும் பரலோகம் செல்வேன்" என்று கூறுவதில் எந்த பயனும் இல்லை. பரலோகத்திர்க்குள் பாவத்தோடு நுழைய முடியாது. பாவ மன்னிப்பை பெற்றவர்கள் தான் நுழைய முடியும்.

கிறிஸ்மஸ் என்பது இயேசுவின் வருகையின் அர்த்தத்தை உணரும் நாள். அவர் வந்த நோக்கத்தை முழுமையாக அறிய நாம் நம்மை தயார் படுத்தி கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கும் இந்த நற்செய்தியை சொல்ல வேண்டும். இயேசு பிறந்தவுடன் இந்த உலகத்திற்கு வந்த முதல் செய்தி என்ன தெரியுமா? ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் தூதர்களை பார்த்து பயந்து போக அவர்களோ "உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக என்றார்கள்" இயேசு இந்த உலகத்தில் பிறந்தவுடன் இரண்டு நிகழ்வுகள் நடந்தது. ஒன்று "இருளில் இருப்பவர்கள் பெரிய வெளிச்சத்தை கண்டார்கள்" இரண்டு "உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக" என்ற செய்தி பரலோகில் இருந்து பூமிக்கு வந்தது.

பாவ இருளில் இருப்பவர்கள் இயேசுவை உள்ளத்தில் பிறக்க செய்வதன் மூலம் பெரிய வெளிச்சத்தை காண முடியும், அப்படிப்பட்ட வெளிச்சத்தை கண்டவர்கள் மிகப்பெரிய சமாதானத்தை காண முடியும். இது தான் இந்த கிறிஸ்மஸ் நாளில் நற்செய்தியை இருக்க முடியும்.

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அனைவருக்கும் என் குடும்பத்தின் சார்பாக கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.

உங்களுக்கு ஓர் நற்செய்தி
இந்த உலகம் தரமுடியாத மிகப்பெரிய சமாதானத்தை இயேசு தருகிறார்

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

Wednesday, December 24, 2014

ஹேமா ஜான் அவர்களின் சாட்சி

"பாடினால், என் இயேசுவுக்காக மட்டுமே பாடுவேன்"
வைராக்கிய விதை ஹேமா ஜான் அவர்களின் சாட்சி

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்கள் அனைவருக்கும் வாழ்த்துதல்களை கூறிக்கொள்கிறேன். உங்களை சந்திப்பதிலே ஆண்டவர் கொடுத்திருக்கிற இந்த கிருபைக்காகவும் அவருக்கு நன்றி சொல்கிறேன். வேதம் சொல்கிறது "கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றும் உள்ளது". இயேசு கிறிஸ்து யார் என்று அறியாத ஓர் பிராமண குடும்பத்தில் இருந்து 89 ம் ஆண்டு ஆண்டவர் என்னை பிரித்து எடுத்தார். அவருடைய பிள்ளையாக மாற்றிக்கொண்டார். அவருடைய நாமத்திற்கே மகிமை உண்டாகட்டும்.

பிராமண குடும்பத்திலே பிறந்து வைராக்கியமான முறையிலே நான் வளர்க்கப்பட்டாலும் என்னுடைய படிப்பு கல்வி எல்லாம் கிறிஸ்தவ பள்ளிகளிலே தான் இருந்தது. கிறிஸ்தவ பள்ளியில் படித்தாலும் கூட உண்மையான ஆண்டவர் அன்பை அறியாமல் இருந்தேன். குடும்பத்திலே பல போராட்டங்களும் பிரச்சனைகளும் இருந்தது. என்னுடைய தகப்பனாருக்கு சரியான கண் பார்வை இல்லாதபடியினால் குடும்ப பாரத்தை சுமக்க கூடிய பொறுப்பு என் மீது வந்தது. வறுமையை தவிர குடும்பத்திலே மற்றொரு பெரிய பிரச்சனையையும் நான் சந்திக்கவேண்டி இருந்தது.

அது சமாதானமின்மை. சந்தோசமும், சமாதானமும் என் குடும்பத்திலே என் பெற்றோர்களிடத்தில் காணப்படவில்லை. அந்த சூழ்நிலையிலே நான் தேடுகிற நான் விரும்பிகிற சமாதானத்தை யார் கொடுக்க முடியும் என்கிற ஏக்கம் என் உள்ளத்திலே என் சிறு வயது முதலே இருந்து வந்தது. பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு குடும்ப சூழ்நிலையின் காரணமாக பாரம்பரியமாக பாடல் பாடுகிற கிருபை என் குடும்பத்திற்கு இருந்தபடியினால், என் முன்னோர்கள் அனைவரும் கர்நாடக சங்கீதத்திலே முறையான தேர்ச்சி பெற்றிருந்தபடியினால் எனக்குள்ளும் அந்த தாலந்து பாரம்பரியமாக வந்தது. இந்த தாலந்தை பல திரைப்பட பாடல்களை திரைப்பட குழுக்களில் பாடுவதின் மூலமாக நான் வெளிப்படுத்தி வந்தேன். இதன் மூலமாய் குடும்பத்தின் சூழ்நிலை மாறினாலும், வறுமையின் சூழ்நிலை மாறினாலும் குடும்பத்தில் சமாதானமும் நிம்மதியும் வரவில்லை.

அந்த வேளையிலே 89 ம் ஆண்டு அடையார் கேட் ஹோட்டல் என்று அழைக்கப்படுகிற ஐந்து நட்சத்திர ஹோட்டலிலே அக்கௌண்ட்ஸ் டிபார்ட்மெண்டில் வேலைக்கு சேர்ந்த போது தான் "கல்பனா" "மேரி" என்ற இரண்டு சகோதிரிகளை சந்தித்தேன். என்னோடு பணிபுரிந்து வந்த அந்த சகோதிரிகள் ஆண்டவரை குறித்து எடுத்து சொன்னார்கள். அந்த இரண்டு நண்பர்களை சந்தித்ததன் மூலமாக "என்னுடைய குடும்பத்தில் சமாதானத்தை கொடுக்க வல்லவர் இந்த ஆண்டவர் மட்டுமே என்பதை நான் புரிந்து கொண்டேன். உண்மையான கிறிஸ்தவன், அல்லது கிறிஸ்தவள் கிறிஸ்தவ பெயரை மாத்திரம் வைத்துகொண்டால் போதாது உண்மையாக ஆண்டவரை உள்ளத்தில் ஏற்று கொள்ள வேண்டும் என்பதை நான் புரிந்துகொண்டேன். ஆனாலும் என் இருதயத்திலே முழுமையாக இடம் கொடுக்க முடியவில்லை. அந்த சூழ்நிலையிலே எனக்கென்று ஓர் எதிர் காலத்தை யோசிக்க முடியாத அந்த சூழ்நிலையிலே என்னுடைய குழுவில் ட்ரம்ஸ் வாசித்த ஜான் என்பவர் என்னை திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தார். ஆனால் என்னில் திருமணமே செய்துகொள்ள விருப்பம் இல்லாதிருந்தது.

என்னுடைய நண்பர்கள் சொன்னதன் காரணமாக 89ம் ஆண்டு அக்டோபர் மாதம் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்திற்கு சென்று ஜெபித்தேன். அப்போது அங்கிருந்த தேவ ஊழியர் "ராஜன் ஜான்" என்பவர் ஜெபத்தின் மூலமாக நான்கு காரியங்களை இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தினார். "உன் குடும்பத்திலிருந்து எனக்காக உன்னை பிரித்து எடுத்தேன்" "நீ என்னுடைய ஊழியத்தை செய்வாய்" உலகத்திற்காய், பணத்திற்காய், புகழுக்காய் நீ பாடி கொண்டிருக்கிறாய். ஆனால் என்னுடைய நாம மகிமைக்கென்று இந்த உலகம் முழுவதும் உன்னை அழைத்து செல்வேன் என்று வாக்கு பண்ணினார். "நீ எனக்கார் ஒரு அடி எடுத்துவைக்கும் போது நான் உனக்காய் யாவையும் செய்து முடிப்பேன்" என்று சொல்லும்போது என்னுடைய குடும்பத்தில் சமாதானத்தை கொடுக்க வல்லவர் அந்த ஆண்டவர் மட்டும்தான் என்று புரிந்துகொண்டேன். அந்த ஜெபத்தின் முடிவிலே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக ஏற்று கொண்டேன்.

24 வருடங்களாக நான் தேடி கொண்டிருந்த சமாதானமும் சந்தோசமும் அந்த ஜெபநேரத்திலே என் உள்ளத்திலே வந்தது. பலவித எதிர்ப்புகளின் மத்தியில் "ஜான்" அவர்களை 1990 ஆகஸ்ட் 24ம் நாள் திருமணம் செய்துகொண்டேன். திருமணத்திற்கு முன் பல சினிமா பாடல்கள் பாடிகொண்டிருத நான் "பாடினால் இந்த ஆண்டவருக்கு மட்டும் தான் பாடுவேன்" என்று வைராக்கியமாய் ஒரு முடிவு எடுத்து என் தாலந்துகளையும், என் வாழ்க்கையையும் கர்த்தருடைய கரத்தில் ஒப்புகொடுத்தேன். இந்த நாள் வரைக்கும் ஆண்டவரின் மகிமைக்காக பல ஆயிரம் பாடல்கள் பாட ஆண்டவர் உதவி செய்தார். 24 வருடமாக என் குடும்பத்திலே காணாத சமாதானத்தை தேவன் கொடுத்தார். கர்த்தரின் நாமத்திற்கு மகிமையுண்டாவதாக. பல ஒளிநாடக்களிலே பாடும்படியாக தேவன் வாய்ப்பு கொடுத்தார். குறிப்பாக சகோதரர் T . Agustin என்பவர் அதிகமாய் கிறிஸ்தவ பாடல்கள் பாடும்படியாக ஊக்கப்படுத்தினார்.

இயேசு அழைக்கிறார், சகோதரர் சாம் ஜெபத்துரை, சகோதரர் மோகன் சி லாசரஸ் என்று பெரிய ஊழியக்காரர்கள் ஒலிநாடாக்களில் பாடும்படியாக தேவன் எனக்கு கிருபை தந்தார். இந்த ஆண்டவர் ஒருவரே நமக்காக, நம் பாவங்களுக்காக, தன்னுடைய ஜீவனை கொடுத்தவர். என் குடும்பத்தின் சமாதானத்திற்கென்று பல இடங்களுக்கு சென்று, பல விக்கிரங்களை நான் தொழுது வந்திருக்கிறேன். ஆனால் ஒரு தெய்வத்தினாலும் என் குடும்பத்திற்கு சமாதானத்தை கொடுக்க முடியவில்லை. இந்த ஒரு ஆண்டவர் தான் எனக்காக யாவையும் செய்து முடித்தவர். எனக்காக தன ஜீவனை கொடுத்தவர்.

உங்கள் வாழ்க்கையிலும் கூட, உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் இந்த ஆண்டவர் ஒருவரே நமக்காய் ஜீவனை கொடுத்தவர், உங்களுக்காக மாட்டு தொழுவத்திலே பிறந்தவர் இந்த ஒரு தேவன் தான் என்பதை நீங்கள் புரிந்து அதை உங்கள் உள்ளத்திலே நீங்கள் அறிந்து அதை அறிக்கை செய்வீர்களேயானால் உங்கள் பாவமான வாழ்க்கையை விட்டு நீங்கள் திரும்புவீர்கலேயானால் உங்களுடைய உள்ளத்திலே இந்த ஆண்டவரால் வரமுடியும். என்னுடைய வாழ்கையில் செய்ததுபோல பல அற்புதங்கள் உங்கள் வாழ்க்கையிலும் நடைபெறும். ஆமென்.

தொகுப்பு மற்றும் பதிப்பு

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

Monday, December 22, 2014

நன்மையானவற்றையே நமக்கு தர வல்லவராயிருக்கிறார்

நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். - (யோவான் 14:13)
.
இதைப் போலத்ததான் நாம் தேவனிடம் நமது தேவையை கதறி, கெஞ்சி கேட்டுப் பெற்றுக் கொள்கிறோம். கர்த்தரும் அதைத் தருகிறார். ஆனால் தேவன் ஒருவேளை நாம் கேட்டதைவிட நன்மையானதை கொடுக்கச் சித்தமாயிருந்திருப்பார். ஆனால் நம் ஜெபம் அதை தடை செய்திருக்கும். நாம் ஜெபிக்கும்போது “உம்முடைய சித்தத்தின்படி எங்களுக்கு வாய்க்கச் செய்யும்” ஆண்டவரே என்று அவருடைய சித்தத்திற்கு ஒப்புக் கொடுத்து ஜெபிக்கும் போது அவர் நன்மையானவற்றையே நமக்கு தர வல்லவராயிருக்கிறார்.

ஐந்து வயது நிரம்பிய வில்லியம், தன் தாயுடன் தனது பிறந்த நாளுக்காக பொம்மை கடைக்குச் சென்று தனக்கு பிடித்த விளையாட்டுச் சாமான் வாங்கச் சென்றான். அங்கு அநேக பொம்மைகளும் விளையாட்டுச் சாமானங்களும் நிரம்பி இருந்தன. அதில் அவனுக்கு விருப்பமான, கலர்கலர் விளக்குகளுடன் விதவிதமான சத்தங்களுடன் வேகமாய் செல்லும் கார் இருந்தது. அதைக் கண்டவுடன் அவன் தன் தாயிடம் அடம் பிடித்து இந்த கார்தான் எனக்கு வேண்டும் என்று கேட்டு தொந்தரவு செய்தான். தாயும் பார்க்கலாம் என்று கூறி விட்டு பின்பு வீடு திரும்பினார்கள்.
.
அடுத்த நாள் பிறந்தநாள் பரிசாக அவன் விரும்பிய அதே கார் அவனுக்கு கொடுக்கப்பட்டது. அதைக் கண்ட அவனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அப்பொழுது அவன் சகோதரன் “அட மடையா! இந்த காருக்கே நீ இவ்வளவு சந்தோஷப்படுகிறாயே, அம்மா உனக்கு இதைவிட பெரிதான ரிமோட் கண்ட்ரோல் கார் வாங்கி கொடுக்க இருந்தார்கள். ஆனால் நீ இதை வாங்க வற்புறுத்தியதால் இதை வாங்கிக் கொடுத்தார்கள்” என்றான். அதைக் கேட்டபோது வில்லியத்தின் இருதயம் கனத்தது.
.
இதைப் போலத்ததான் நாம் தேவனிடம் நமது தேவையை கதறி, கெஞ்சி கேட்டுப் பெற்றுக் கொள்கிறோம். கர்த்தரும் அதைத் தருகிறார். ஆனால் தேவன் ஒருவேளை நாம் கேட்டதைவிட நன்மையானதை கொடுக்கச் சித்தமாயிருந்திருப்பார். ஆனால் நம் ஜெபம் அதை தடை செய்திருக்கும். நாம் ஜெபிக்கும்போது “உம்முடைய சித்தத்தின்படி எங்களுக்கு வாய்க்கச் செய்யும்” ஆண்டவரே என்று அவருடைய சித்தத்திற்கு ஒப்புக் கொடுத்து ஜெபிக்கும் போது அவர் நன்மையானவற்றையே நமக்கு தர வல்லவராயிருக்கிறார்